
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் எழுத்துருக் கூடம் என்பது ஒண்மை அறக்கட்டளையின் உதவியுடன் தொடங்கப்பட்ட இரண்டாண்டு காலத் திட்டப்பணி. தமிழ் எழுத்துருக்களை உருவாக்குவதும் அதற்கு தேவையான ஆய்வுகளை முன்னெடுப்பதும் தமிழ் எழுத்துருக் கூடத்தின் முதன்மையான செயல்பாடாகும். தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் முன்னோடியான திரு. முத்துநெடுமாறன் அவர்களின் வழிகாட்டுதலுடன் தமிழ் எழுத்துருக் கூடம் இயங்குகிறது. புதிய தமிழ் எழுத்துருக்களை, தமிழ் எழுத்துகளின் அழகியலுடன் அறிவியல் முறையில், உலகத்தரத்தில் உருவாக்கி வருகிறது.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சேகரிப்பில் உள்ள பழைய ஆவணங்கள், நூல்கள் உள்ளிட்டவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உலோக அச்சு எழுத்துருக்கள், ஆளுமைகளின் கையெழுத்துகள் போன்றவற்றிலிருந்தும் புதிய எழுத்துருக்களை உருவாக்கி வருகிறது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் ஒண்மை அறக்கட்டளையும் இந்த எழுத்துருக்களை அனைவரும் பயன்படுத்தும் வகையில் SIL Open Font License என்ற உரிமத்தில் இலவசமாக வழங்குகின்றன.
தமிழில் உருவான முன்னோடி அச்சுக்கலை எழுத்துருக்களைக் கண்டறிவதும், பாதுகாப்பதும், ஆய்வு செய்வதும், அவற்றைச் சமகாலப் பயன்பாட்டிற்கான கணினி எழுத்துருக்களாக மாற்றுவதும் தமிழ் எழுத்துருக் கூடத்தின் நோக்கம். அச்சுக்கலையில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியையும், போக்குகளையும் அறிந்துகொண்டு, அவற்றை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதும் இதன் பணிகளில் முக்கியமானது.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் எழுத்துருக் கூடம் இதுவரை இரண்டு பயிற்சி பட்டறைகளையும் கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளது. இதன்மூலம் தமிழ் எழுத்துருக்கள் பற்றிய விழிப்புணர்வையும், எழுத்துரு உருவாக்கத்திற்கான உந்துதலையும் தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ளது.